Wednesday, March 2, 2011

மண்ணறையில் எதுவும் நடைபெறவில்லையே ஏன்?

கேள்வி:
மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள் ஆதாரம் உள்ளதா? மரணத்திற்குப் பின்பு மனித உடல் மட்கியவுடன் எவ்வாறு அவை திரும்ப எழுப்பப்படும்? எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு மீள முடியும். மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையை தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையே ஏன்?

பதில்:
மறுமையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் இப்போது நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வது நல்லது. ஏனெனில் ஒரு பொருளை முதலில் படைப்பது தான் சிரமமானது. அதை அழித்து விட்டு மறுபடியும் உருவாக்குவது அவ்வளவு சிரமமானதல்ல. இது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கடிய விதியாகும். ஒரு கம்பியூட்டரை உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டன உருவாக்கிய பின் அது போல் இலட்சக்கணக்கில் உருவாக்குவது எளிதாகி விட்டது.

நூறு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இவ்வுலகில் இருக்கவில்லை வேறு எங்கேயும் இருக்கவில்லை எந்தப் பொருளாகவும் நீங்கள் இருக்கவில்லை. ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இறைவன் படைத்திருப்பதை நம்பும் முஸ்லிம்களுக்குப் படைக்கப்பட்டவைகளை அழித்து விட்டு மீண்டும் படைப்பது நம்புவது எளிதானதாகும். மேலும் கடவுள் இருப்பதை முஸ்லிம்கள் நம்பும் போது அவன் சர்வ சக்தியுள்ளவன் என்று நம்புகின்றனர். மனிதனைப் போல் பலவீனமானவனைக் கடவுள் என்று முஸ்லிம்கள் நம்புவதில்லை மட்கிப் போனவைகளை உருவாக்குவது உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இயலாத ஒன்றுதான். கடவுளின் நிலையும் அது தான் என்றால் அப்படி ஒரு கடவுள் தேவையே இல்லை. நமக்கெல்லாம் முடியாததை எவனால் செய்ய முடியுமோ அவன் தான் கடவுள் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

எனவே மறுமை பற்றிக் கேள்வி கேட்பது பொருத்தமில்லாதது. கடவுளைப் பற்றி விவாதித்து முடிவுக்கு வந்துவிட்டால் மறுமை சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமானவை. மண்ணறையில் (கப்ரில்) வேதனை என்பது ஒரு அடையாளத்திற்காகச் சொல்லப்படும் வார்த்தையாகும். கப்ரைத் தோண்டிப் பார்த்தால் யாருமே வேதனை செய்யப்படுவதைப் பார்க்க முடியாது இதைச் சரியான முறையில் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் விளக்கவேண்டும். நல்லவர் கெட்டவர் அனைவரும் கப்ர் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை குறிப்பாக கெட்டவர்கள் யாரும் கப்ர் வேதனையிலிருந்து தப்பவே முடியாது என்பதற்கும் இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன.

கெட்டவர்கள் பலர் தீயிட்டுப் பொசுக்கப்பட்டு சாம்பலாக்கப்படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர்களின் சாம்பல் பரப்பப் பட்டுள்ளன. இவர்களுக்கு கப்ரே இல்லை என்பதால் கப்ர் வேதனை கிடையாது எனக் கூறினால் அனைவரும் கப்ர் வேதனையைச் சந்திப்பார்கள் என்ற ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டுவிடும். அதுபோல் ஒரு மனிதனை காட்டு விலங்குகள் அடித்தச் சாப்பிட்டுவிடுகின்றன அல்லது கடலில் ழுழ்கிச் செத்தவனை மீன்கள் உணவாக உட்கொண்டுவிட்டன இவர்களுக்கெல்லாம் கப்ர் ஏது?

அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அந்த மண்ணுக்குள்தான் வேதனை நடக்கிறது என்று நாம் நம்பினால் உலகில் பெரும்பகுதியினருக்கு (எரிக்கப் படுவோர்) கப்ர் வேதனை இல்லாமல் போய்விடும் இறந்தவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய இறைவன் நம்மால் காண முடியாத உலகில் வைத்து கண்டிக்கிறான் என்பதுதான் இதன் பொருளாக இருக்க முடியும்.

குறிப்பிட்ட சில கப்ர்களில் வேதனை செய்யப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக் காட்டியிருப்பதாக ஹதீஸ்கள் உள்ளன. அவை இறைத்தூதர் என்ற வகையில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதாகும் என்று கருதவேண்டும்.

No comments:

Post a Comment